Wednesday, December 21, 2011

பில்லியன் கணக்கில் பாக்கி: அமெரிக்காவிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் அறிவிப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி பில்லியன் கணக்கில் பாக்கி இருப்பதால் இனி அந்நாட்டிடம் எந்த உதவியும் கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் “கூட்டணி ஆதரவு நிதி”(சி.எஸ்.எப்) என்ற பெயரில் அமெரிக்கா மாதம் தோறும் பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன் டொலர் அளவிற்கு நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது மாதம்தோறும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செலவு செய்து விட்டு அதற்கான கணக்கு வழக்குகளை அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் இராணுவம் 187 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான 495.2 பில்லியன் டொலரில் 38 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது பல்வேறு காரணங்கள் கூறி நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா. அவ்வகையில் பாகிஸ்தானின் கணக்கில் 35 முதல் 40 சதவிகிதத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்த விடயமாகும்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பாகிஸ்தான் கேட்ட நிதியான 12 பில்லியன் டொலருக்குப் பதிலாக அமெரிக்கா 8.6 பில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.
அதற்குப் பின் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும் 900 மில்லியன் டொலரில் இருந்து 2.5 பில்லியன் டொலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 600 மில்லியன் டொலர் பாக்கி உள்ளது. இதையடுத்து இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதேநேரம் பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என ஆலோசித்து வருகிறது.

No comments:

Post a Comment